Independence Day 2018 : சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார். சென்னை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Independence Day 2018 : முதல்வர் பழனிசாமி கொடியேற்றம்:
2018ம் ஆண்டு 72ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இதையொட்டி கோட்டையை சுற்றிலும் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
முதல்வர் பழனிசாமி கொடியேற்றினார்
முன்னதாக, போர் நினைவுச் சின்னத்தில், மறைந்த வீரர்களுக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, புனித ஜார்ஜ் கோட்டை முன் வரும் முதல்வருக்கு முப்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் ஜீப்பில் ஏறி முப்படையினர், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அதன்பின் கோட்டை கொத்தளத்துக்கு சென்ற முதல்வர், தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.
இந்த தினத்தில், சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் ஏழடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.