சென்னை, மதுரை மற்றும் கோவை நகரங்களில் விரைவில் எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில், பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, மாநிலத்தில் கார்பன் மாசுவை கட்டுப்படுத்தும் வண்ணம், C-40 Cities Clean Bus Declaration ஒப்பந்தத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, மாநில மக்களின் பயன்பாட்டிற்காக 2 ஆயிரம் எலெக்ட்ரிக் பஸ்கள் மற்றும் 12 ஆயிரம் பிஎஸ்4 கம்ப்ளையண்ட் பஸ்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
முதற்கட்டமாக, சென்னை, மதுரை மற்றும் கோவை நகர சாலைகளில், 500 எலெக்ட்ரிக் பஸ்களின் இயக்கம் விரைவில் துவக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.
இருசக்கர வாகனஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் குறித்த சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து குறித்து பதிலளித்த அமைச்சர், சென்னை போன்ற நகரங்களில், ஹெல்மெட் கட்டாயம் என்ற விதி பின்பற்றப்படுகிறது. கிராமப்புறங்களில் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், அங்கு வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாத நிலை நிலவுவதாகவும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடமிருந்து பல லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.