யானைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு என்றால் அதில் மூங்கிலும் உண்டு. மற்ற தாவரங்களை போல் இது ஆண்டு தோறும் பூத்துக் கொண்டே இருக்காது. தன்னுடைய வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் பூக்கும். பின்னர் அதன் வாழ்வு அப்படியே முடிந்தும் விடும். ஒரு மூங்கில் பூக்க குறைந்தபட்சம் 35 முதல் 40 ஆண்டுகளாவது ஆகும். மூங்கிலின் தொடர் வளர்ச்சியை உறுதி செய்ய அது தொடர்ந்து வெட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மூங்கிலை நம்பி வாழ்வாதாரம் கொண்டிருக்கும் பழங்குடிகள் ஏராளமானோர் உண்டு. ஆனால் இந்திய வனத்துறை சட்டம் 1927, மூங்கிலை மர வகையில் சேர்த்து வனம் சார்ந்து வாழும் மக்களை மூங்கில் வெட்டுவதில் இருந்து தடுத்தது. இதனால் மூங்கில் வளர்ந்து பல்வேறு இடங்களில் இறுதி கட்டத்தையும் எட்டியது.
மேலும் படிக்க : 26 யானைகள்… 48 நாட்கள்… களைகட்டிய முகாம்
பல ஆண்டுகள் பழங்குடிகள் மற்றும் ஆர்வலர்களின் போராட்டங்கள் மற்றும் வேண்டுகோளுக்கு பிறகு மூங்கில் மீண்டும் புல் வகையாக அறிவிக்கப்பட்டது. வனங்களில் வாழும் பழங்குடிகளின் சிறு வன சேகரிப்பு பொருளாக மூங்கில் ஒரு காலத்தில் இருந்தது. சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வந்த பின்னும் கூட மூங்கில்களை பழங்குடியினர் வெட்டவிடாமல் வனத்துறையினர் பல்வேறு இடங்களில் தடுக்கும் சூழல் ஏற்பட்டிருந்தது.
கடந்த மாதம் முதுமலைக்காடுகளில் இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து மூங்கிலும் பூக்கவே துவங்கிவிட்டது. இனி அந்த இடத்தில் மூங்கில் வளர்வது சிரமம் தான். மீண்டும் புதிய இடத்தில் மூங்கில்கள் வைக்கப்பட்டு வளர்ந்தால் தான் உண்டு. ஏற்கனவே முக்கியமான வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்காமல் யானைகள் மனிதர்களின் குடியிருப்பு பகுதிக்கு வரும் சூழல் உருவாகி இருக்கிறது. மூங்கில் களிகளின் அழிவு மேலும் பல வாழ்வியல் பிரச்சனைகளை யானைகளுக்கு உருவாக்கும் என்று கூறுகிறார் கூடலூரில் இருக்கும் விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் செல்வராஜ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.