சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மென்பொறியாளர் பிரதீப் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஆப்ரிக்க கிளி ஒன்றை பரிசாக பெற்றுள்ளார். இவரும் இவரது மனைவியும் மிகுந்த கவனத்துடன் ஆசையாக அந்த கிளியை கவனித்து வந்துள்ளனர். அவர்களது வளர்ப்பு நாய் மேக்ஸ் அதனுடயை விளையாட்டுத் தோழனாக இருந்துள்ளது. அதற்கு பெப்பர் என பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, பெப்பர் கூண்டை திறந்து வெளியே வந்ததை பிரதீப் உடனடியாக பார்க்கவில்லை. வீட்டின் கதவும் திறந்து இருந்ததால் பறவை பறந்து சென்றுள்ளது. இது குறித்து பிரதுப் கூறுகையில், "நாங்கள் அதை எங்கள் மகன் என்று கருதுகிறோம். நாயும் கிளியும் ஒன்றாக விளையாடுவதைப் பார்ப்பது அரிது. பெப்பர் வழியை மறந்திருக்கலாம் அல்லது மர்மநபர்களால் பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் ”என்றார். கிளி காணாமல் போன இரண்டு நாட்களும் சோகத்தில் இரவு தூக்கமில்லாமல் தவித்துள்ளனர்.
பெப்பர் காணாமல் போனது குறித்து சமூக வலைதளங்களில் பதிவை வெளியிட்டுள்ளார் பிரதீப். மேலும் அவர்களின் வீட்டைச் சுற்றி 5 கிமீ சுற்றளவில் சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளார். பறவை நீண்ட தூரம் பறப்பது சாத்தியமில்லை என்றும் கிளியை விற்க யாராவது அணுகினால் அவரை எச்சரிக்குமாறு அப்பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கும் தெரிவித்துள்ளார். கிளி பற்றிய தகவல் தெரிந்தால் பிரதீப்பிடம் 87544 43878 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
காணாமல் போன செல்லப்பிராணியை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு அவரது குடும்பத்தினர் பண வெகுமதியைக் கொடுப்பார்கள் என்று பிரதீப் கூறினார். மேலும் மாம்பலம் காவல்நிலையத்திலும் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
ஆப்பிரிக்க சாம்பல் கிளி எளிமையான வாக்கியங்களை உருவாக்கும் திறனுடன் மனித பேச்சைப் பிரதிபலிப்பதில் திறமையானது என்று அறியப்படுகிறது. இந்த பறவைகள் ஐந்து வயது குழந்தையைப் போல புத்திசாலியாக இருக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இயற்கையின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் 2018ல் இந்த பறவை அழிந்து வரும் இனமாக பட்டியலிடப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil