Advertisment

அ.தி.மு.க அலுவலகம் வந்த இ.பி.எஸ்: கடைசி நிமிடத்தில் தடுக்க முயன்ற ஓ.பி.எஸ் தரப்பு

நீதிமன்ற தீர்ப்பையடுத்து, எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக அலுவலகம் சென்றார். அங்கு இபிஎஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

author-image
WebDesk
New Update
Eps

EPS came to ADMK head office today

இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக அலுவலகத்தில் அனுமதிக்க கூடாது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். ஆனால் அதையும் மீறி இன்று இபிஎஸ் தலைமை அலுவலகம் வந்தார்.

Advertisment

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓபிஎஸ், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

இதை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்தது.

நீதிமன்ற தீர்ப்பையடுத்து, எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக அலுவலகம் சென்றார். அங்கு இபிஎஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய இபிஎஸ், பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறோம், அதிமுகவை சிதைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு நமது வெற்றி ஒரு பாடமாக இருக்கும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், நீதிமன்ற உத்தரவுபடி அதிமுக தலைமை அலுவலகம் எங்கள் தரப்புக்கு தரப்பட்டுள்ளது. பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அத்துமீறி கட்சி அலுவலகத்தில் சிலர் நுழைந்தனர். அதிமுக அலுவலகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தோம். அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படவில்லை, அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும். அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்போம்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. 96 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர்.

ஓபிஎஸ், பச்சோந்தியைவிட அதிகமாக நிறம் மாறுபவர். அதிமுகவுக்கு விஸ்வாசம் இல்லாதவர். 1989 தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் பணியாற்றியவர் என்று இபிஎஸ் பேசினார்.

இபிஎஸ் வருகையை முன்னிட்டு, ராயப்பேட்டை அலுவலகம் முன் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

முன்னதாக, அதிமுக அலுவலகத்திற்கு இபிஎஸ் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி இன்று காலை டிஜிபி சைலேந்திர பாபுவிடம் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், பொதுக்குழு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.  மேலும், அதிமுக அலுவலத்தில் நடந்த மோதல் தொடர்பான வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் எடப்பாடி பழனிச்சாமியை அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கக் கூடாது. அவர்கள் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் மீண்டும் பெரிய பிரச்சினை உருவாகும். சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முதல்வர் அனுமதிக்க மாட்டார் என்று நம்புகிறோம் என்று புகழேந்தி கூறியிருந்தார்.

ஆனால் அதையும் மீறி, இன்று இபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்து சென்று நிர்வாகிகளை சந்தித்தார்.

இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Admk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment