Advertisment

இரட்டை இலை கிடைத்த 2-வது நாளே மோதல் : மதுரையில் ஓபிஎஸ்-ஸுக்கு தெரியாமல் இபிஎஸ் விழா

இரட்டை இலை கிடைத்த 2-வது நாளே அதிமுக.வில் மோதல் வெடித்திருக்கிறது. மதுரையில் ஓபிஎஸ்.ஸுக்கு தெரியாமல் இபிஎஸ் பங்கேற்ற விழா சர்ச்சை ஆகியிருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu government, aiadmk, cm edappadi palaniswami, deputy cm o.panneerselvam, two leaves symbol, asphire swaminathan, EPS, OPS

இரட்டை இலை கிடைத்த 2-வது நாளே அதிமுக.வில் மோதல் வெடித்திருக்கிறது. மதுரையில் ஓபிஎஸ்.ஸுக்கு தெரியாமல் இபிஎஸ் பங்கேற்ற விழா சர்ச்சை ஆகியிருக்கிறது.

Advertisment

இரட்டை இலை சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி-துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அணிக்கு ஒதுக்கீடு செய்து நேற்று முன் தினம் (23-ம் தேதி) இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அடுத்த நாளே ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இரட்டை இலை சின்னம் கிடைத்த வெற்றியை 23-ம் தேதியே சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு அணியினரும் இணைந்து கொண்டாடினார்கள். தொடர்ந்து சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதிமுக சார்பில் முப்பெரும் விழாவுக்கு போஸ் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த விழாவில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, 100 அடி உயர கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

சுமார் 15 நாட்களுக்கு முன்பே இந்த விழாவுக்கு திட்டமிடப்பட்டு, முதல்வரின் அப்பாய்ன்மென்ட் பெறப்பட்டிருக்கிறது. ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் என ஓபிஎஸ் அணியினர் யாருக்கு இந்த விழா குறித்த தகவல் கூறப்படவில்லை.

இரட்டை இலை கிடைத்த பிறகு நடைபெறும் முதல் விழா என்ற அடிப்படையில், அதற்கான வெற்றி விழாவாகவும் இது அமைந்துவிட்டது. நேற்று மாலைதான் இந்த விழா குறித்த தகவலே ஓபிஎஸ் தரப்புக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் அவர்களுக்கு பலத்த அதிர்ச்சி!

இது தொடர்பாக ஓபிஎஸ் அணியின் ஐ.டி பிரிவை சேர்ந்தவரான ஆஸ்பையர் சுவாமிநாதன் இன்று தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் ஒரு பதிவை இட்டார். அதில் அவர், ‘இரட்டை இலை மீட்பு.... மாபெரும் கொண்டாட்டமாம்.... முப்பெரும் விழாவாம்..... கட்சி கொடி ஏற்றுவார்களாம்...... மாண்புமிகு அமைச்சர் அறிவிப்பு..!

யாருக்கும் அழைப்பும் இல்லை, தகவலும் இல்லை, தலைவர்கள் உட்பட... மனங்கள் உருண்டுகொண்டு தான் இருக்கும் போல..!’ என குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியை சேர்ந்தவரான மைத்ரேயன் எம்.பி., ‘அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ என ட்விட்டரில் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து இப்போது ஆஸ்பையர் சுவாமிநாதனும் ஓபிஎஸ் அணியின் மனக் குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆஸ்பையர் சுவாமிநாதன், ‘ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர்தான் கட்சியில் பிரதான நிர்வாகிகள். அவர்களுக்கு தகவலே தெரிவிக்காமல், ஒரு நிகழ்ச்சி நடத்துவது எப்படி சரியாக இருக்கும்? எனவே தொண்டர்களின் மனக் குமுறலை நான் பதிவாக வெளியிட்டிருக்கிறேன்’ என்றார் அவர்!

ஆனால் இபிஎஸ் தரப்பினரோ, ‘டெல்லியில் இரட்டை இலை வழக்கில் ஆஜராவதில் இருந்து, நேற்று கோட்டையில் துணை முதல்வரை மதுசூதனன் சென்று சந்தித்தது வரை கோஷ்டி பூசலை வளர்ப்பதே அவர்கள் தரப்புதான். முதல்வர் தனியாக ஒரு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை மட்டும் சர்ச்சை ஆக்குகிறார்கள்’ என்றனர்.

இரட்டை இலை கிடைத்தாலும், ஒரே உறைக்குள் இரு கத்திகளாக இபிஎஸ்-ஓபிஎஸ் உரசிக் கொண்டுதான் இருப்பார்கள் போல!

 

Two Leaves Symbol
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment