கூட்டணிகள் மாறி மாறி வரும் எனவே அது முக்கியமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிப்.27-ம் தேதி ஈரோடு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவில் இரட்டை தலைமை சிக்கல் ஈரோடு இடைத் தேர்தலையும் பாதித்தது. வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் வரை எட்டப்பாடி பழனிசாமி சார்பில் ஒரு வேட்பாளரும் மற்றும் பன்னிர் செல்லம் சார்பில் ஒரு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டனர். கடைசியாகத்தான் பன்னீர் செல்வம் தனது வேட்பாளரை திரும்பப்பெற்று கொண்டார். மேலும் பாஜக அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக கூறினாலும், தேர்தல் பரப்புரையில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில், கிறிஸ்தவ அமைப்பினர் மற்றும் மத போதகர்கள் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இ.பி.எஸ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி , “ தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதற்கு அதிமுகதான் காரணம். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி அமையும். மற்ற மதங்கள் பாதிக்கப்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அதிமுகதான். மேலும் கூட்டணி மாறி மாறி வரும் எனவே அது முக்கியமில்லை ” என்று அவர் பேசியுள்ளார்.