Advertisment

சரிசமமான பலத்தில் தி.மு.க- அ.தி.மு.க: ஈரோடு கிழக்கு யாருக்கு சாதகம்?

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க - அ.தி.மு.க சரிசமமான பலத்தில் இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Erode East constituency by-election, DMK and AIADMK Tug off war, தி.மு.க, அ.தி.மு.க, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல், DMK, Congress, AIADMK

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா இறந்ததால், அவர் எம்.எல்.ஏ-வாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில், தி.மு.க - அ.தி.மு.க சரிசமமான பலத்தில் இருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Advertisment

பெரியாரின் கொள்ளுப் பேரனும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனுமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால், அவர் எம்.எல்.ஏ -வாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்குத் தொகுதி தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அ.தி.மு.க கூட்டணியில் த.மா.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், த.மா.க வேட்பாளர் அ.தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டார். அதில், திருமகன் ஈ.வெ.ரா சில 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தந்தை பெரியார், கணிதமேதை ராமானுஜம் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய தொகுதியாக உள்ளது. இடைத் தேர்தல் நடைபெறுகிற, ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு நகரத்திற்குள்ளேயே முடிந்துவிடக் கூடிய தொகுதி என்பதால் இந்த தொகுதியில் விவசாயம் இல்லை. அதேநேரம், ஜவுளித்தொழிலின் மையமாகத் திகழ்கிறது. துணிகளுக்கு சாயமிடுதல், பிளீச்சிங் செய்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மற்றும் சலவை ஆலைகள் இந்த தொகுதியில் இயங்கி வருகின்றன.

ஈரோடு கனி மார்க்கெட்டில் (ஜவுளிசந்தை) திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடக்கும் சந்தையில் மட்டும் சுமார் ரூ.2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஜவுளி வாங்க வியாபாரிகள் ஈரோடுக்கு வருவார்கள். இதனால், கோடிக் கணக்கில் வர்த்தகம் நடைபெறும்.

2008-ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியாக இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது ஈரோடு தொகுதி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என பிரிக்கப்பட்டு 2 தொகுதிகளாக உருவானது.

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் ஈரோடு தொகுதியாக இருந்தபோது தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், கம்யூனிஸ்ட் கட்சி 1 முறையும் வெற்றி பெற்று உள்ளது.

தொகுதி சீரமைப்புக்கு பின்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. 2011-ல் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.வின் வி.சி.சந்திரகுமாரும், 2016-ல் அ.தி.மு.க.வின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசும் வெற்றி பெற்றனர்.

2011 தேர்தலில் தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி, தே.மு.தி.க. வேட்பாளரான வி.சி.சந்திரகுமாரிடம் தோல்வி அடைந்தார். 2016 தேர்தலில் அப்போதைய எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார் தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து களம் கண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க.வின் கே.எஸ்.தென்னரசு 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா. 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றனர். இந்த தேர்தலில் நோட்டாவுக்கு 1546 வாக்குகளும் அ.ம.மு.க. வேட்பாளர் முத்துகுமரனுக்கு 1204 வாக்குகளும் கிடைத்தது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா. மறைவால் தற்போது இந்த தொகுதிக்கு முதல் முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் கடந்த முறை 8 ஆயிரத்து 904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈ.வெ.ரா. வெற்றி பெற்றார். இந்த நிலையில் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல, அ.தி.மு.க கூட்டணியில் த.மா.க போட்டியிடுமா? அல்லது கடந்த தேர்தலைப் போல, த.மா.க வேட்பாளர் அ.தி.மு.க சின்னத்தில் போட்டியிடுவாரா? அல்லது அ.தி.மு.க நேரடியாக போட்டியிடுமா என்பதை அ.தி.மு.க விரைவில் அறிவிக்கும்.

மு.க. ஸ்டாலின தலைமையில், தி.மு.க. ஆட்சி அமைந்து நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று ஆளும் கட்சி கூட்டணி முனைப்புடன் உள்ளது. தி.மு.க. கூட்டணியில் யாரை நிறுத்தினாலும் அவர்கள் வெற்றிக்காக பாடுபடுவோம் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணியும் ஈரோடு கிழக்கு தொகுதியை வென்று அது அ.தி.மு.க-வின் கோட்டை என்று நிரூபிக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த தொகுதியில் ஆளும் தி.மு.க-வும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வும் சரிசமாமன பலத்தில் இருப்பதால், இந்த இடைத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பு தமிழ்நாடு அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Aiadmk Election Erode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment