இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக தொடுத்த புகாரில், விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக அதிமுக தனது வேட்பாளரை அறிவித்தது. இந்நிலையில் இரு கட்சிகளும் அப்பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக சார்பாக எம்.பி சி.வி சண்முகம் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தார்.
சுமார் 8 ஆயிரம் பேரின் பெயர்கள், இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், மேலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான பெயர்கள் தொகுதிக்கு சமந்தமே இல்லாமல் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் புகார் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. இந்த கடிதத்தை சத்யபிரதா சாகு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி இருக்கிறார். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பும் விரிவான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சத்யபிரதா சாகு அனுப்புவார் என்பது குறிப்பிடதக்கது.