போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக, 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தக் கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அருள்மணி என்பவரிடம் 40 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றபிரிவு காவல் துறையினர் 2017-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறையினர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க நிபந்தனை விதித்தது.
இந்நிலையில் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத செந்தில் பாலாஜிக்கு, மார்ச் 8-ம் தேதி ஆஜராக மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாகவும், தன்னை துன்புறுத்தக் கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும் எனவும், வழக்கறிஞர் தன்னுடன் இருக்க அனுமதிக்க கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், விசாரணையின் போது செந்தில் பாலாஜியை துன்புறுத்த கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும் விசாரணையின் போது, வழக்கறிஞரை அனுமதிக்க கோரிய மனுவுக்கு மார்ச் 14-ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய குற்றபிரிவு காவல் துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.