சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், அதே பகுதியில் எஸ்.வி.டிராவல்ஸ் என்ற பெயரில் ரயில்வே டிக்கெட் பதிவு செய்யும் அலுவலகம் நடத்தி வந்தார். இவரது அலுவகலத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு புகார்கள் குவிந்தன.
இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை இ-டிக்கெட் சோதனைப்பிரிவு ஆய்வாளர் முத்துப்பாண்டி, பரங்கிமலை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் மனோஜ்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் விஜயலட்சுமியின் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவர் உரிய உரிமம் இன்றி ரயில்வே டிக்கெட்டுகளை பதிவு செய்யும் அலுவலகம் நடத்தியது தெரிய வந்தது. போலி ஆவணங்கள் மூலமாகவும் டிக்கெட்டுகளை விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து, ரூ.42,000 மதிப்பிலான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, அங்கீகாரம் இன்றி டிக்கெட் பதிவு செய்தது தொடர்பாக விஜயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.