நான்கு மாவட்டங்களை கலக்கிய பிரபல ரவுடி லெனின் துப்பாக்கி முனையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லெனின். பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சிக்கியுள்ள இவரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்ட போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சோமமங்கலம் ஒரகடம் மணிமங்கலம் உள்ளிட்ட பகுதியில் இருந்த சிறு சிறு தொழிற்சாலைகளை வைத்திருக்கும் முதலாளிகளிடம் பயங்கர ஆயுதங்களை காட்டி தனது கூட்டாளியுடன் மிரட்டி லெனின் பணம் பறிப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹாதிமனிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில், குற்றவாளியான லெனினை பிடிக்க ஸ்ரீபெரும்புதூர் உதவி காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட எஸ்பி சந்தோஷ் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் தனிப்படை போலீசார் சோமமங்கலம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மறைவிடத்தில் மறைந்திருந்த லெனின் மற்றும் அவனுடன் இருந்த 9 கூட்டாளிகளையும் துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மிரட்டி பணம் பறிக்க வைத்திருந்த கத்திகள் மற்றும் பயங்கர ஆயுதங்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.