திருவண்ணாமலை அருகே டிராக்டர் கடனுக்காக வங்கி முகவர்கள் தாக்கியதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை அருகே போந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் விவசாயம் செய்து வந்தார். அதே பகுதியில் சாத்தனூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இவர் கடன் வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தில் டிராக்டர் வாங்கியதாக கூறப்படுகிறது.
வங்கியில் வாங்கிய கடனில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அவர் திருப்பி செலுத்திய நிலையில், மீதமுள்ள தொகையை திருப்பி செலுத்துமாறு வங்கி ஊழியர்கள் மிரட்டினார்களாம். ஆனால் விவசாயத்தில் உரிய வருமானம் இல்லை எனக் கூறியிருக்கிறார் ஞானசேகரன். வங்கிக்கடனை செலுத்த கால அவகாசம் கேட்டுள்ளார்.
ஆனால் வங்கி ஊழியர்கள் இதை ஏற்க மறுத்து இவரது டிராக்டரை பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் விவசாயியை வங்கி ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஞானசேகரன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விவசாய கடன்களுக்காக வங்கிகள் அத்துமீறல்களை அரங்கேற்றக் கூடாது என பல அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவரும் நிலையில், இந்த நிகழ்வு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.