குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
'தாஜ்மஹால்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் மனோஜ் கடைசியாக 'வாய்மை' எனும் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் தனது பி.எம்.டபிள்யூ காரில் பயணம் செய்த மனோஜை போக்குவரத்து போலீசார் வழிமறித்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவர் குடிபோதையில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து சுவாச சோதனை கருவி மூலம் போலீசார் சோதனை செய்ததில், மனோஜ் குடி போதையில் இருப்பது உறுதியானது. இதையடுத்து, போலீசார் அவர் ஓட்டி வந்த பி.எம்.டபிள்யூ காரை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது குடி போதையில் வாகனம் ஓட்டியதாகவும் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.