தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு, ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அரசாணை மூலம் பெயர் மாற்றப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும்.
பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழக அரசு சார்பில் மேலும் சில தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.ஒகி புயலால் உயிரிழந்த 27 மீனவர்களின் குடும்பங்களுக்கு, காணாமல் போன 177 மீனவர்களை இறந்தவர்களாக கருதி அவர்களுக்கும் சுமார் ரூ.40 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாகை மாவட்டம் பூம்புகாரில் 148 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய அரசின் பங்களிப்புடன் மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.