அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய தினகரன் தரப்புக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை செப்.11 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இங்கிலாந்தில் பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக, டிப்பர் இன்வேஸ் மெண்ட் என்ற நிறுவனம் மூலமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டது மற்றும் ஐரோப்பிய நாட்டில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் ஹோட்டல் பெயரில் மூன்று நிறுவனங்கள் தொடங்கப்பட்டதில் 36.36 லட்சம் அமெரிக்க டாலரும், 1 லட்சம் பவுண்டு வரை பெற்று அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது 1996 ம் ஆண்டு அமலாக்கபிரிவு வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டை ரத்து செய்ய கோரி டிடிவி தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், டி.டி.வி தினகரன் மீது புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை முன்று மாதத்தில் முடிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்து விட்டு, அன்றைய தினமே அமலாக்கப் பிரிவு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வது குறித்து எழும்பூர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதாகவும், இது தவறானது எனவும் கூறி தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், ஆகஸ்ட் 16ல் ஆஜராகி குறுக்கு விசாரணை துவங்குவது குறித்து தெரிவிக்கும்படியும், 16 முதல் ஆகஸ்ட் 31க்குள் சாட்சிகள் குறுக்கு விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த காலக்கெடுவை நீட்டிக்க கோரி தினகரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், சாட்சிகள் குறுக்கு விசாரணையை வரும் 11ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனக் கூறி கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டார்.