கோவை மாவட்டத்தில் உள்ள 9 எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், “கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் 50 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அப்பணிகளை உள்நோக்கத்தோடு நிறுத்தி வைத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி, சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 10 கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம் என கடிதம் வந்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கியமான கோரிக்கைகள் அடங்கியுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடத்தில் சாலைகள் படுமோசமாக உள்ளன. இந்தச் சாலைகளை சீர்செய்யுமாறு முதல் கோரிக்கையை வைத்துள்ளோம்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் ஒப்பந்தம் கோரப்பட்ட .500 சாலைகளை இந்த அரசு இரத்து செய்துள்ளது. மேலும், தற்போது குடிநீர் விநியோகம் செய்ய 10 முதல் 15 நாட்கள் ஆகின்றன.
அணைகளில் தண்ணீர் இருந்தும் அதனை சரியாக விநியோகிப்பதில்லை. மறுபுறம், முந்தைய அதிமுக அரசாங்கம் கொண்டுவந்த மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்தத் மக்கள் நலத்திட்டங்களை திமுக புறக்கணிக்காமல் நிறைவேற்றி தர வேண்டும்.
வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துவிட்டன. தற்போது ஏதோ உள்நோக்கத்தோடு திட்டம் திறுத்தப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் நிறைவுபெறும் போது மாநகரத்தில் பேருந்து நெரிசல் முழுமையாக குறையும்” என்றார்.
மேலும், அத்திக்கடவு அவினாசி திட்டம் குறித்த கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். எனினும் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் மத்திய அரசின் வழக்குரைஞர் ஆஜரானது தொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.
செய்தியாளர் பி. ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.