பெண்களின் பாதுகாப்பிற்கு பல சட்டங்கள் அதிகம் உள்ள நம் நாட்டில் தான், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகமாக உள்ளது என குஜராத் காங்கிரஸ் பெண் எம்.பி. அமீ யாஜ்னிக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை எழும்பூரில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நீதித்துறையின் பங்கு குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.ஜெய்சந்திரன், பெண்கள் அதிகாரம் வழங்குவது பற்றி தொடர்ந்து விவாதித்து கொண்டிருக்கிறோம். பல சட்டங்கள் வந்துள்ளன. நீதிமன்றங்களும் நடவடிக்கைகளை எடுக்கின்றன. உரிமைகளை வழங்கும்படி பெண்கள் கேட்க கூடாது. பறித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதன் மூலம் மட்டுமே அவர்களுக்கு அதிகாரம் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அமீ யாஜ்னிக், "பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி விவாதிப்பதுடன் நின்று விடாமல் அதற்கான பணிகளை செய்ய வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல சட்டங்கள் அதிகம் உள்ள நம் நாட்டில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகமாக உள்ளது" என குறை கூறினார்.
மேலும், பெண்குழந்தைகள் படிக்க வேண்டும் என கூறுகிறோம். ஆனால் அப்பெண் வேலைக்கு செல்லும் போது அவருக்கு பாதுகாப்பு இல்லை. ஆண்டுக்கு ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவ வேண்டும் என பெண் வழக்கறிஞர்களை அவர் கேட்டுக்கொண்டார்.