வழக்கறிஞரை தாக்கியதாக போடப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த முன்னாள் எம்எல்ஏ பாலபாரதிக்கு, இனிமேல் நீதிமன்றத்தின் முன்பு போராட மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திண்டுக்கல்லில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி தாளாளா் ஜோதிமுருகனுக்கு’ மகிளா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கண்டித்தும், ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி, ஜனநாயக மாதா் சங்கத்தினா் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது வழக்கறிஞா் தேவேந்திரன் என்பவருக்கும், மாதா் சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், தன்னை தாக்க முயன்றதாக தேவேந்திரன் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் உள்பட 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நீதிமன்றம் முன், அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காகவும் தனியாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி பாலபாரதி, ஜானகி உட்பட 6 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் போராட்டத்தின் போது வழக்கறிஞர் தேவேந்திரன் எங்களை தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால் அவரைக் கண்டித்து கோஷம் எழுப்பினோம். ஆனால் அவர் நாங்கள் தாக்கியதாக தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் பொய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், போலீசார் எங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். எனவே முன் ஜாமீன் வேண்டும் என அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிமன்றத்தின் முன்போ அல்லது நீதிமன்ற வளாகத்திலோ இதுபோல் போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டோம் என பாலபாரதி மற்றும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பவர்கள் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி கூறினார். பின்னர் இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி அதுவரை 6 பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”