பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நிலையில் மதுரை சரவணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சென்னையில் அதிமுகவில் இணைந்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “2023ஆம் ஆண்டு புத்தாண்டில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நடக்கக் கூடிய அதிமுகவில் இணைந்துள்ளேன்.
வரும் காலங்களில் அதிமுகவின் கரத்தை எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து வலுப்படுத்துவேன்” என்றார். தொடர்ந்து, திமுக ஆட்சி எப்படி இருக்கிறது? திமுகவில் இணையாதது ஏன் என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
அதற்குப் பதிலளித்த சரவணன், “நான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய சம்பவம் உங்களுக்கு தெரியும். அந்தச் செருப்பு வீச்சு சம்பவத்துக்கு பிறகு கட்சியில் இருந்து விலகினேன்.
4 மாதமாக என் அரசியல் பயணம் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகின. தனிக்கட்சி கூட தொடங்கப் போகிறேன் என்றார்கள்.
பொதுவாக ஒரு ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் கழித்துதான் அதிருப்தி மேலோங்கும். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் மக்கள் மத்தியில் அதிருப்தியை காண முடிகிறது. எடப்பாடி ஆட்சி பரவாயில்லை என்று மக்கள் இன்று பேசிக் கொள்கின்றனர்” என்றார்.
அதிமுகவில் இணைந்த காரணம் என்ன? என்ற கேள்விக்கு, மக்கள் சேவை செய்ய அதிமுகவில் இணைந்துள்ளேன். எடப்பாடி சாமானிய மனிதராக இருக்கிறார். அதனால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் இணைந்தேன்” என்றார்.
மதுரை சரவணன் மதிமுக, திமுக, பாஜகவை தொடர்ந்து தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/