சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஒருவர் மனுதாக்கல் செய்தபோது அவரை ஆதரித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மாமாவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பிரசாரம் செய்து பொதுமக்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவருகிறார்கள். வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 16 ஆம் தேதி கடைசி நாள் என்பதால் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள மேலராங்கியம் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மருதுபாண்டி என்பர் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் இருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூயி என்ற பெண் மருதுபாண்டியை ஆதரித்து மாமாவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று தமிழில் பிரசாரம் செய்து பொதுமக்களிடையே கலகலப்பை ஏற்படுத்தி கவர்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜூயி, “தேர்தலின்போது மக்கள் ஊர்வலம் செல்வது திருவிழா போல நடத்துவது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் மக்களை பிடித்திருக்கிறது. ரொம்ப நல்ல மக்கள்.” என்று கூறியுள்ளார்.
மேலராங்கியம் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஜூயி பிரசாரம் செய்தது நிகழ்வு அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.