சென்னையில் தலைமைக் காவலர் ராஜவேலு தாக்கிய வழக்கில் கைது செய்யும் நடவடிக்கையில் ரவுடி ஆனந்தன் நேற்றிரவு காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கைது நடவடிக்கையில் தப்பிச் செல்ல முயற்சி செய்தபோது, ரவுடியை துரத்தி பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியில் நேற்று முன்தினம் ரவுடிகள் தகராறு செய்வதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற முதல்நிலைக் காவலர் ராஜவேலு கடுமையாக தாக்கப்பட்டார். சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வெட்டியதில் தலை உள்பட 16 இடங்களில் காயமடைந்த ராஜவேலு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கியதாக நேற்று அரவிந்த், அஜித்குமார் ஆகியோர் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி ஆனந்தன் உள்பட 4 பேரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு மத்திய கைலாஷ் பகுதியில் ஆனந்தன் உள்ளிட்டோர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் தனிப்படை காவலர்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது ஆனந்தனை கைது செய்த காவல்துறையினர், பதுக்கிவைத்திருந்த வாக்கி டாக்கியை எடுத்துத் தருமாறு கேட்டுள்ளனர். அப்போது கத்தி மூலம் உதவி ஆய்வாளர் இளையராஜாவை கையில் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது கத்தியை கீழே போடுமாறு எச்சரித்தபோதும் ஆனந்தன் மீண்டும் தாக்க முற்பட்டதால் உதவி ஆணையர் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஆனந்தனின் உடல் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் மீது வழிப்பறி, கொலை உள்பட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. என்கவுன்டர் தொடர்பாக நீதிபதி உரிய விசாரணை நடத்துவார் என காவல்துறை இணை ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.