அம்பத்தூர் கல்யாணபுரம் பஜனை கோயில் தெருவில் வசிப்பவர் சாம்ராஜ். இவரது மூன்றரை வயது மகள் ஜாய்ஜெனிதா. இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலில் சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி 2ஆம் வகுப்பு மாணவன் பார்கவ் (7), சென்னை தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் திருவள்ளுவர் தெருவில் வசித்த ஸ்ரீதர் (32) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பலியாகி உள்ளனர். மேலும் மர்ம காய்ச்சல் காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சென்னை பெருநகர குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.கே.சண்முகம் கூறியதாவது:
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகம் முறையாக அப்புறப்படுத்துவதில்லை. குப்பைக் கழிவுகளை எடுத்துச் செல்லும் லாரிகளில் இருந்து கழிவு நீர் சாலைகளிலே சிந்திக் கொண்டே செல்கிறது. அந்த குப்பை லாரியின் பின்னால் சென்றாலே சுவாசக் கோளாறு உள்ளிட்ட தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சென்னையின் பல பகுதிகளில் கழிவு நீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் ஆறாக ஓடுகிறது. இவற்றை எல்லாம் சீர் செய்யாமல் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து பயன் இல்லை, மக்களின் வரிப்பணம்தான் வீண் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.