திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில், அங்குள்ள பெண் குழந்தைகள் நலமுடன் இருப்பதற்காக, 12 வயது சிறுமியை நிலவுக்கு மணப்பெண்ணாக்கும் சடங்கு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். இதற்கு குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தெய்வநாயக்கன்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரால், பல ஆண்டுகளாக இந்த சடங்கு நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, பூப்பெய்யாத இளம்பெண் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு ‘நிலாப்பெண்’ணாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஏழு நாட்களுக்கு நடத்தப்படும் இந்த சடங்கு, தை முழு நாளன்று நிறைவு பெறும். இந்தாண்டு சந்திர கிரகணம் இருந்ததால், ஒரு நாள் முன்னதாகவே இச்சடங்கு முடிக்கப்பட்டது. இந்தாண்டும் 12 வயது சிறுமி ஒருவர் இவ்வாறு நிலாப்பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை அச்சிறுமியை ஆவாரம் பூக்களால் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். அதன்பின், கோவிலில் பூஜை நிகழ்த்தப்பட்டு, அச்சிறுமியை ஓலை குடிசையில் தங்க வைத்தனர். அதற்கடுத்த நாள் காலை அச்சிறுமி விளக்கு ஏற்றி அதனை குளத்தில் மிதக்கவிட்டார். அத்துடன் இச்சடங்கு நிறைவுற்றதாக கருதப்படுகிறது.
நிலாவை சாந்தப்படுத்தி ஊரிலுள்ள பெண் குழந்தைகள் உடல் நலத்துடன் இருக்க இச்சடங்கு கடந்த 5 தலைமுறைகளாக நிகழ்த்தப்படுவதாக கிராமத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், இத்தகைய சடங்குகளால் அச்சிறுமி தனிமை மற்றும் மன அழுத்தத்தை உணருவார் என, குழந்தைகள் நல ஆர்வலர்கள் இச்சடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.