சென்னையில் இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்ற சிறுமி, திருடனை கண்டுப்பிடிக்க போலீஸுக்கு உதவியிருக்கிறாள். அது வேறு யாரும் அல்ல, அவளது தந்தை தான்.
14 வயதான் அந்த சிறுமிக்கு தன் தந்தை திருடன் என்பது தெரியாது. மணலியைச் சேர்ந்த கார்த்திக் தனது குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றிருக்கிறார். தரிசனம் முடித்துத் திரும்பிய அவர், தான் நிறுத்தியிருந்த ஹோண்டா ஆக்டிவா வண்டியை காணாததால் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
சிவராத்திரி தினமான அன்று பூஜை முடித்து இரவு 11 மணிக்கு தான் கோயிலில் இருந்து வெளியே வந்திருக்கிறார். கிட்டத் தட்ட 1 மணி நேரம் வண்டியைத் தேடி அலைந்த அவர், ஆட்டோவில் தனது மனைவியையும் குழந்தையும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பியிருக்கிறார். இடையில் போலீஸில் புகாரளிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது.
ஆட்டோவில் செல்கையில், நள்ளிரவு ஒரு மணியளவில் ஒரு சிறுமி தனது வாகனத்தை ஓட்டிச் செல்வதை கார்த்திக் பார்த்திருக்கிறார். பிறகு ஆட்டோக்காரர் உதவியுடன் அந்த சிறுமியை மடக்கி பிடித்திருக்கிறார்கள்.
ஆட்டோ டிரைவரான தனது தந்தை இந்த வண்டியை வாங்கி வந்ததாகவும், வீட்டில் அவர் இல்லாததால் அவசர தேவைக்காக தான் அந்த வண்டியை ஓட்டி வந்ததாகவும் அந்த சிறுமி தெரிவித்திருக்கிறாள். இதற்கிடையே போலீஸுக்கும் தகவல் கொடுத்திருக்கிறார் கார்த்திக்.
அப்போது தான் தனது தந்தை திருடன் என்பது அந்த சிறுமிக்கு தெரிந்திருக்கிறது. பிறகு அவளின் உதவியோடு, அவளது தந்தை சரவணனை கைது செய்து, பைக்கை கார்த்திக்கிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் காவல்துறையினர். மேலும் 4 வாகனங்கள் சரவணனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.