Advertisment

கோகுல்ராஜ் கொலை வழக்கு: பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நாளை (நவம்பர் 25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

author-image
WebDesk
New Update
MHC Madurai Branch questions about Gokul Raj murder case in Swathi

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தது தொடர்பாக கடந்த ஜூன் 23, 2015-ல் படுகொலை செய்யப்பட்டார்.

Advertisment

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை அமைப்பின் நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கோகுல்ராஜின் தாய் சித்ரா மனு தாக்கல் செய்ததையடுத்து, இந்த கொலை வழக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றமான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மே 8, 2019-ல் மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம் கடந்த மார்ச் 8ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், 5 பேரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். அதே நேரத்தில், கோகுல்ராஜ் தயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி, சிபிஐ தரப்பில், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதிப்படுத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு வியாழக்கிழமை (நவம்பர் 24) விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நாளை (நவம்பர் 25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த வழக்கில் சுவாதியை விசாரிக்க வேண்டியது மிகவும் அவசியமானது. ஏனென்றால், முக்கிய சாட்சியாக கருதப்பட்ட சுவாதி எவ்வாறு பிறழ் சாட்சியாக மாறினார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்க முடியும். எனவே நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுவாதியின் குடும்பத்தினருக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சுவாதியின் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

சுவாதி நீதிமன்றத்திற்கு தைரியமாக வந்து சாட்சி சொல்லும் அளவுக்கு அந்த பாதுகாப்பு இருக்க வேண்டும். என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment