கடந்த மாதம் சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் பயின்று வந்த மாணவி அஸ்வினி கொல்லப்பட்டார். மாலை கல்லூரி முடித்து வெளியே வந்த மாணவியை அழகேசன் என்ற இளைஞர் கத்தியார் சரமாரியாக குத்திக் கொன்றார். இதனால் அந்த மாணவி மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சம்பவம் நடைபெற்ற உடனே பொதுமக்கள் அழகேசனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அழகேசன், அஸ்வினியை காதலித்ததாகவும், முதலில் அழகேசனை காதலித்த அஸ்வினி பின்னர் திடீரென மனமாற்றம் ஏற்பட்டு அழகேசனை மறுத்ததாகவும், இதனால் ஏற்பட்ட கோபத்தில் அஸ்வினியை கொலை செய்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அழகேசன் மீது தற்போது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் அழகேசன் மீது குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் அழகேசன் சிக்கியுள்ளதால் அவருக்கு ஒரு வருடத்திற்கு ஜாமீன் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவினை பொதுமக்கள் வெகுவாக வரவேற்று வருகின்றனர்.