தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் மருத்துவர்கள்:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வே இல்லை என்றும் மருத்துவர்கள் சார்பில் புகார் எழுந்துள்ளது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் மருத்துவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும் மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.இதனால், ஊதிய உயர்வு, பணி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் சுமார் 18,600 அரசு மருத்துவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான இடங்களை பெறும்வரை அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும், இதனால், 200 முதல் 300 மாணவர்களின் மருத்துவ இடங்கள் ரத்து செய்வதற்கான வாய்ப்புள் அதிகம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் சென்னையில் 4 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். மருத்துவர்களின் போராட்டத்தால் புற நோயாளிகள் பிரிவு செயல்படவில்லை.
அனைத்து பிரிவிலும் நோயாளிகள் சிகிச்சைக்காக வரிசையில் காத்து நின்றனர்.மருத்துவர்கள் சிகிச்சை வராததால் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.