தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல, மற்ற பகுதிகளில் இருந்து சென்னைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவு மற்றும் வருவாய் குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; செவ்வாய் கிழமை மாலை 4.30 மணி நிலவரப்படி, தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்வதற்காக 1 லட்சத்து 48 ஆயிரத்து 671 பேர் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்து இருந்தனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 82 ஆயிரத்து 425 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.4 கோடியே 96 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
இதேபோலஇ தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் ஊருக்கு திரும்புவதற்காக இன்று (புதன்கிழமை) முதல் 22-ந் தேதி வரை 88 ஆயிரத்து 353 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக மட்டும் 84 ஆயிரத்து 48 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.2 கோடியே 96 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.