பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலா. இவர் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்காக காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு சென்று வருவது வழக்கம். அப்படி சென்ற போது, அங்குள்ள உயர் பொறுப்பில் உள்ளவர்கள் கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் 85 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களுடன் , பணமும் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறி 4 மாணவிகளை நிர்மலா கன்வின்ஸ் செய்யும் ஆடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு மாணவிகள், தங்களுக்கு விருப்பமில்லை என்றும், இது பற்றி பேசவேண்டாம் என்று மறுக்கின்றனர். இருப்பினும், அவர்களைத் தொடர்ந்து கட்டாயப்படுத்தும் விதத்தில் பேராசிரியை நிர்மலா பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து, பேராசிரியை நிர்மலாவை 15 நாள் சஸ்பெண்ட் செய்தது கல்லூரி நிர்வாகம். மாணவிகளிடம் பேசியதை ஒப்புக்கொண்டுள்ள நிர்மலா, தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்தார்.
குறிப்பாக அந்த உரையாடலில் 'இது கவர்னர் லெவல்ல உள்ள விஷயம். கவர்னர் தாத்தா இல்ல' என்று பேராசிரியை நிர்மலா தேவி கூறி இருக்கிறார்.
இந்த நிலையில், கல்லூரி முதல்வர் பேராசிரியை நிர்மலா தேவி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் உயர்மட்ட விசாரணை மேற்கொள்வார் என ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், இன்று மாலை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். பேராசிரியை விவகாரம் குறித்து விளக்கமளிக்க அவர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.