தமிழ்நாட்டில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழங்களில் படித்த மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் பட்டம் வழங்கப்படாமல் உள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகங்களின் இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கூறும்போது, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 9.29 லட்சம் மாணவர்கள் பட்டமளிப்புக்காக காத்திருக்கின்றனர்.
ஆளுநரின் தலையீட்டால் பட்டமளிப்பு விழா நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்களை அழைத்து பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் எனக் கோருவதால் தாமதமாகிறது. தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் மட்டுமே பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது என்று கூறியிருந்தார்.
இதனிடையே, தமிழகத்தில் இருந்து இதுவரை 7 பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநரிடம் அனுமதி கோரியுள்ளன என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வழங்கப்பட்ட விளக்கத்தில், ஜூன் 16 - சென்னை பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவும் (தாற்காலிக), ஜூன் 19ஆம் தேதி திருவள்ளுவர் பல்கலைக கழகத்திலும், ஜூன் 28ல் பெரியார் பல்கலைக்கழகத்திலும் ஜூலை 7-ஆம் தேதி தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகத்திலும் பட்டமளிப்பு விழாக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலை., நெல்லை மனோன்மணீயம் பல்கலை., கோவை வேளாண் பல்கலை. ஆகியவற்றில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.
இதில் திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் மட்டுமே கொரோனா பரவலால் 3 ஆண்டுகளுக்கு சேர்த்து மாணவர்களுக்கு தற்போது பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
கோவை பாரதியார் பல்கலை.யில் இதுவரை துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. துணைவேந்தர் நியமிக்கப்பட்டு இருந்தால், அங்கு பட்டமளிப்பு விழாவை நடத்த அனுமதித்திருப்போம். தமிழ்நாடு அரசு சார்பில் அதற்காக தேடுதல் குழு அமைக்கப்படவில்லை. இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“