Advertisment

கவர்னர் வருகை திடீர் தள்ளிவைப்பு : 20-ம் தேதி வரை காத்திருக்க முடிவு

கவர்னர் வித்யாசாகர் ராவின் வருகை திடீரென தள்ளி வைக்கப்பட்டது. முக்கிய முடிவுகளை எடுக்க, 20-ம் தேதி வரை காத்திருக்க முடிவு செய்திருக்கிறார் அவர்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
governor vidyasagar rao, governor vidyasagar rao visit postponed,ttv.dhinakaran, m.k.stalin, chennai high court

கவர்னர் வித்யாசாகர் ராவின் வருகை திடீரென தள்ளி வைக்கப்பட்டது. முக்கிய முடிவுகளை எடுக்க, 20-ம் தேதி வரை காத்திருக்க முடிவு செய்திருக்கிறார் அவர்.

Advertisment

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று (செப். 18) சென்னைக்கு வருவதாக இருந்தது. விமானப்படை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதாக இருந்தார் அவர். ஆனால் அவரது வருகையை அரசியலுடன் முடிச்சுப் போட்டு செய்திகள் வெளிவந்தன.

ஏற்கனவே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கவர்னரிடம் மனு கொடுக்கப்பட்டது. டிடிவி.தினகரன் அணியின் 21 எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என கவர்னரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். அதன்பிறகும் கவர்னர் நடவடிக்கை எடுக்காததால், திமுக தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், டிடிவி.தினகரன் தரப்பில் வெற்றிவேல் எம்.எல்.ஏ.வும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த 10-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வெற்றிவேல் தரப்பில், ‘தங்கள் அணியின் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த திட்டமிடுகிறார்கள்’ என முறையிடப்பட்டது. ‘அப்படி தகுதி நீக்கம் செய்யும் திட்டம் சபாநாயகரிடம் இருக்கிறதா என கேட்டுச் சொல்லும்படி’ அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அன்று மதியத்திற்கு பிறகு நீதிமன்றத்தில் பதில் தெரிவித்த விஜய் நாராயணன், ‘நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உத்தரவாதம் தர முடியாது’ என குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த செப்டம்பர் 20-ம் தேதி வரை தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தச் சூழலில் கவர்னர் வித்யாசாகர் இன்று சென்னைக்கு வருவதாகவும், 21 அல்லது 22-ம் தேதியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கூடும் என்றும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. அதேபோல, 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபாலுக்கு நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை. எனவே 18 எம்.எல்.ஏ.க்களையும் சஸ்பெண்ட் செய்ய அவர் நடவடிக்கை எடுப்பார் என்றும் பேசப்பட்டது.

ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் உயர்நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கவர்னர் விரும்பவில்லை எனத் தெரிகிறது. வருகிற 20-ம் தேதி உயர்நீதிமன்றம் இதில் என்ன நிலையெடுக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்க கவர்னர் முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்க விரும்பாமல் கவர்னர் வித்யாசாகர் ராவ் தனது சென்னை பயணத்தை தள்ளி வைத்திருக்கிறார். வருகிற 20-ம் தேதி கவர்னரின் சென்னை விசிட் இருக்கும் என கவர்னர் மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

Chennai High Court Ttv Dhinakaran M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment