குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவுக்கு ஒரு வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குட்கா ஊழல்:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி, விற்பனை செய்ததாக குட்கா குடோந் உரிமையாளர் மாதவராவ், மத்திய - மாநில அரசு அதிகாரிகள் என ஆறு பேரை சிபிஐ அதிகாரிகால் கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து, ஆறு பேரும், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களின் காவலை ஜனவரி 9ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். இதற்கிடையில், வரும் 29ம் தேதி மகள் திருமணம் நடக்க உள்ளதால் தனக்கு 10 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என மாதவராவ் சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி திருநீல பிரசாத், ஜனவரி 1ம் தேதி வரை மாதவராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜனவரி 2ம் தேதி மீண்டும் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டார்.