தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ்,"கொரோனா வைரஸ் பாதிப்புள்ள 43 ஆயிரத்து 538 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 8 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களில் 4 பேர் ஒரே குடும்ப உறுப்பினர்கள். அந்த 4 பேரில் 10 மாத குழந்தை ஒன்றுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஈரோட்டை சேர்ந்த இவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டில் இருந்து திரும்பிய 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிய வந்துள்ளது" என்றார்.
கொரோனா வைரஸ் 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 900 கடந்துள்ளது. கொரோனாவிற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil