கனமழை காரணமாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (பிப்;2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, தேவங்குடி, கீழ்வேளூர், கீழையூர், வேதாரண்யம், வேளாங்கண்ணி, திருக்குவளை, செருதூர் உள்ளிட்ட பகுதிகளீல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார்.
அதைபோல திருவாரூர் மாவட்டத்திலும் காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. இதனால் திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (பிப்;2) விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் அறிவித்துள்ளார்.
இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்திலும் சீர்காழி, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆக்கிய மாவட்டங்களில் காலையில் இருந்து கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாகையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“