தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு இன்று (16.8.18) விடுமுறை என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாத் வடநரே அறிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் :
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக காலையில் குளுமையான வானிலை நிலவுகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் மழைபெய்கிறது. இது வெப்பசலனத்தால் ஏற்படும் மழை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது எனவும் மீனவர்கள் யாரும் வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் தென் மேற்கு பருவமழையால் மழை பெய்து அணைகள், ஏரி குளங்கள் நிரம்பி வருகின்றன. இதற்கிடையே ஒடிசா அருகே வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் நிலவுகிறது.
இதன் காரணமாக ஒடிசா, தெலுங்கானா, ஆந்திராவிலும், வட தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்தமானது அடுத்த 48 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என்றும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில், செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலையில் குளிர்ந்த வானிலை நிலவும் எனக் கூறியுள்ளார்.