Advertisment

ரூ17 லட்சம் மோசடி: இ.பி.எஸ் உதவியாளர் ஜாமீன் மனு தள்ளுபடி!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியின் ஜாமின் மனு தள்ளுபடி

author-image
WebDesk
New Update
ரூ17 லட்சம் மோசடி: இ.பி.எஸ் உதவியாளர் ஜாமீன் மனு தள்ளுபடி!

High court dismiss former CM EPS assistant bail plea on fraud case: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

Advertisment

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்தவர்  மணி. இவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சில ஆண்டுகள் உதவியாளராக பணிபுரிந்தவர். இந்த நிலையில், அரசு வேலை வாங்கி தருவதாக கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடம் 17 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. வேலை வாங்கி கொடுக்காமல், பணத்தை மோசடி செய்துவிட்டதாக மணி மீது சேலம் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையிடம் தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார். மேலும் மணிக்கு பணம் அனுப்பிய ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தார்.

தமிழ்ச்செல்வன் தவிர்த்து மேலும் சிலரும் உதவியாளர் மணி மீது போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக மணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து,தலைமறைவாக இருந்த மணியை  சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.  

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மணி ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனுவில் தன் மீதான புகார் பொய் என்றும், தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும், தனக்கு நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.  மேலும், முன்னாள் முதல்வரிடம் உதவியாளராக பணியாற்றி, அந்த வேலையை இழக்கக்கூடிய நிலைமையில், தான் எப்படி, இதுபோன்று பணம் பெற்றிருக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, மனுதாரர் மோசடி  செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும், எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமியின் உதவியாளர் மணியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai High Court Eps
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment