தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்யலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்த முடியாத வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெற்றோர் தங்களது குழந்தைகளை இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்த்து பயன்பெறுகின்றனர்.
ஆனால் இத்திட்டத்தின் கீழ் பயிலும் குழந்தைகளிடம் கட்டாயமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வியில் சேர்க்க பெற்றோர்களிடம் இருந்து ரூ.10,000 வசூலிக்கப்படுவதாகவும், புத்தகம் , சீருடை உள்ளிட்ட இதர செலவினங்களை கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏழை குடும்பங்கள் கடன் வாங்கும் சூழல் உருவாகி உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும் இத்திட்டத்தின் பணக்காரர்கள் மற்றும் அரசுப் பணியில் இருப்பவர்கள் சிலர் தங்களது வருமானத்தை குறைவாக காட்டி குழந்தைகளை சேர்ப்பதாகவும், இதனால் ஏழை குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்த அவர்கள், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் 6 முதல் 14 வயது வரை உள்ளவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.