திருச்சி மாரியம்மன் கோவில் காணிக்கை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அலுவலர் வெற்றி வேல்
சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும், நாடுகளில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் அம்மனை தரிசிக்க வருகின்றனர். அதேபோல் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்து மாரியம்மனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தி, மனம் உருகி அம்மனை தரிசித்து செல்கின்றனர்.
Advertisment
இந்த நிலையில் நேற்று கோவிலில் மாதாந்திர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றி வேல், தங்க நாணயங்களை மறைத்து எடுத்து சென்றதாக புகார் எழுந்தது.
வெற்றி வேல்
இது பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்தது. இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் கோவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி சமயபுரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து போலீசார் கோவிலுக்கு விரைந்தனர். உண்டியல் பணத்தை எண்ணும்போது பதிவான சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர். இதில் மேற்கண்ட அதிகாரி கைவரிசை காட்டி இருந்தால் உடனடியாக அவரை கைது செய்ய நடவடிக்கையை தீவிரப்படுத்திய நிலையில் சிசிடிவி கேமராக்களின் ஆதாரத்தின் படி, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கோவில் வளாகத்தில் மட்டும் அல்லாது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil