திருச்சியில் கோர விபத்து : சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் காரில் பயணம் செய்த 8 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்துக் கொண்டிருந்த கார் ஒன்று, சமயபுரம் டோல்கேட் அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பயங்கர சப்தத்துடன் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள், 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் இருந்து 22 டன் இரும்பு ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர், லாரியை சாலையில் நிறுத்தி விட்டு, அருகில் இருந்து டீ கடைக்கு சென்றிருக்கிறார். அப்போதுதான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அவ்வளவு வேகமாக மோதியும், லாரி ஒரு இன்ச் கூட அசையவில்லை. ஆனால், கார் சுக்கு நூறாகிப் போனது. அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கடப்பாரை போன்ற ஆயுதங்கள் கொண்டு, காரை உடைத்து தான் உள்ளே இருந்தவர்களை மீட்க முடிந்தது.
விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சென்னை மேடவாக்கத்தில் இருந்து அந்த கார் கிளம்பியது தெரிய வந்துள்ளது.