மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (நவம்பர் 12) சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இங்கு வந்தார். நிகழ்ச்சிக்குப் பின் தியாகராயநகரில் உள்ள மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்றார்.
அங்கு மூத்த கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, "முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த தலைமையை பா.ஜ.க நிரப்ப வேண்டும்.
மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றால், அது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வெற்றி பெற்றது போன்றது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் தேர்தல் முடிவடைந்தவுடன், தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி பெறுவதற்கான பா.ஜ.க திட்டம் வகுக்கப்படும். தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க வலுவான கட்டமைப்பை மேற்படுத்தி வருகிறது. முன்னேற்றம் அடைந்து வருகிறது, அந்த மாநிலங்களைப் பார்த்து தமிழக பா.ஜ.க பின்பற்ற வேண்டும்" என்றார்.
மேலும் கூறுகையில், "மாநிலத்தில் முதன்மையான திராவிடக் கட்சிகளில் ஒன்று தி.மு.க வாரிசு அரசியல் செய்கிறது. மற்றொன்று அ.தி.மு.க நிலையான அரசியல் செய்யவில்லை. பா.ஜ.க மக்களிடம் சென்று வெல்ல வேண்டும்" என்று கூறினார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "கட்சியின் வளர்ச்சி குறித்தும், மாநிலத்தின் தேவைகள் குறித்தும் அமித்ஷா கேட்டறிந்தார். தேசத் துரோக குற்றச்சாட்டுகள் உள்பட பா.ஜ.கவினர் மீது ஆளும் அரசு போடப்பட்ட வழக்குகள் குறித்து ஆதாரங்களுடன் உள்துறை அமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil