“பிரபல நடிகர், நிறைய ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் அரசியல்வாதியாகிவிட முடியாது” என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். ‘ஆனந்த விகடன்’ வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘உங்களின் சீனியர்களான கமல், ரஜினி இருவரும் அரசியலை நோக்கி நகர்வதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?’ என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள பிரகாஷ் ராஜ், “பிரபல நடிகர், நிறைய ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன என்ற ஒரே காரணத்துக்காக ஒருவன் அரசியல்வாதியாக முடியாது, ஆகவும் கூடாது. மக்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் இல்லை. இன்றைய அரசியல் சூழலில், தமிழ்நாட்டில் மாற்றம் தேவை.
மக்களுடைய பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தீர்க்கும் வழிகளைத் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாகச் சொல்லும் நல்லவர்களுக்குத்தான் ஓட்டு போடுவார்களே தவிர, ‘நான் ரசிகன்’ என்று இன்றைய இளைய தலைமுறை ஓட்டு போடாது. நான் ரஜினி சாரின் ரசிகன். கமல் சாரின் ரசிகன். ஆனால், இந்தத் தேர்தலில் நான் ரசிகனாக ஓட்டு போட மாட்டேன். அந்த விஷயத்தில் இளைஞர்கள் மீது நான் நம்பிக்கையாக இருக்கிறேன்.
ரஜினி சாராக இருக்கட்டும், கமல் சாராக இருக்கட்டும். ஆனால், என்ன மாற்றத்தைக் கொடுக்கப் போகிறீர்கள், இங்குள்ள பிரச்னைகளை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி கேளுங்கள். ரஜினி, கமல் இருவரும் மக்களுக்குத் தெரிந்தவர்கள்தான்... அவர்கள் அரசியலில் அடியெடுத்து வைக்கும்போது அழகாவார்களா, அசிங்கமாவார்களா என்பது, இனிமேல் அவர்கள் எடுத்து வைக்கும் அடியைப் பொறுத்தது.
ரஜினி, கமல் இருவரையும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். மூன்றாவதாக ஒரு இளைஞன் வந்தால், அவனையும் அப்படியே வியந்து பார்ப்பேன். மற்ற மக்களைப் போல நானும் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வருகின்ற தேர்தலில் முடிவெடுங்கள். மாற்றம் உங்கள் கையில்தான் இருக்கிறது. மறுபடியும் தமிழ்நாட்டை அழகான நாடாக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டும் மனதில் வைத்து வாக்களிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.