தேசிய ஹீரோவான ஆசிரியர் பகவான் விவகாரத்தில் பள்ளிகல்வித் துறை எடுத்துள்ள மிக முக்கியமான முடிவு ஒட்டு மொத்த மக்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
கடந்த 1 வாரமாக எந்த பக்கம் திரும்பினாலும் ஆசிரியர் பகவான் பேச்சு தான். பிரபலங்கள் தொடங்கி, அரசியல் தலைவர்கள், உள்ளூர் ஊடகங்கள், தேசிய ஊடகங்கள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ என ஒரே நாளில் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார் ஆசிரியர் பகவான்.
சாதரணான அரசுப்பள்ளியில் ஆங்கில ஆசிரியரான பகவான் இப்படி ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் என்றால் அதற்கு காரணமே அவரின் பள்ளி மாணவர்கள். பொதுவாக ஒரு ஆசிரியர் பணியிடை நீக்கத்தால் பள்ளியை விட்டு செல்கிறார் என்றால், மாணவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கிஃபட் தருவார்கள், கேக் வெட்டுவார்கள், புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் முதன்முறையாக தமிழ்நாட்டில் எந்த ஆசிரியருக்கும் நடக்காத ஒரு செயல் பகவானின் வாழ்க்கையில் நடந்தது.
அவரின், பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாத மாணவர்கள் பகவானை பள்ளியை விட்டு அனுப்பமாட்டோம் என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டனர். அவர்களை சமாதானம் செய்ய சென்ற ஆசிரியர் பகவானும் அவர்களுடனும் சேர்ந்து அழ ஆரம்பித்தார். ஒரு பக்கம், மாணவர்கள் அழ, மறுபக்கம் ஆசிரியர் பகவான் அழ, இன்னொரு பக்கம் மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர் பகவான் பள்ளியை விட்டு செல்லக் கூடாது என்று போராட்டத்திலும் ஈடுப்பட்டனர்.
இந்த பிரச்சனைக்கு முடிவுக்கு கட்ட வந்த போலீசாரும் மாணவர்களை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று திரும்பி விட்டனர். என்ன இது? ஒரு பள்ளி ஆசிரியரின் இடமாற்றத்திற்கு இப்படி ஒரு போராட்டமா? என்று நினைத்தவர்கள் கூட பகவானுக்கும் , அந்த மாணவர்களுக்கு இடையில் இருந்த பிணைப்பை கண்டு கண் கலங்கி நின்றனர். ஏன் பலரும் தங்களின் பள்ளி ஆசிரியர் குறித்த பழைய ஞாபகளுக்கே சென்று வந்து விட்டனர். பகவான் தன்னிடம் படிக்கும் மாணவர்களிடம் ஒரு ஆசிரியராக மட்டுமே நடந்துக் கொண்டிருந்தால் இது நிகழ்வு சாத்தியமா? என்றால் சந்தேகம் தான்.
ஆனால்,தன்னிடம் படிக்கும் அனைவரிடமும் எந்த ஒரு வேற்றுமையும் காட்டாமல் அண்ணனாகவும், குருவாகவும், தோழனாகவும், குடும்பத்தில் ஒருவராக பழகிய ஆசிரியருக்கு இந்த கண்ணீர் போராட்டம் நடந்ததில்லை எந்தவித தவறும் இல்லை. “நீங்கள் பாடம் நடத்திய பின்பு தான் என் மகள் இங்கிலீஷ்யெல்லாம் பேசுகிறாள்.. இந்த பள்ளியை விட்டு போகாதீங்க் சார்” என்று விவசாயி ஒருவர் பகவானிடம் கெஞ்சிய தருணம் அங்கிருந்த செய்தியாளர்களை கூட சற்று நேரத்தில் உருக வைத்து விட்டதாம்.
அவர்கள் மட்டுமில்லை இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தொடங்கி, ஹிர்த்திக் ரோஷன், நடிகர் விவேக், நடிகர் சமுத்திரக்கனி என கோலிவுட் தொடங்கி பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரும் ஆசிரியர் பகவானுக்கு பாராட்டுக்களை அள்ளி குவித்திருந்தன. இந்நிலையில் தான் ஆசிர்யர் பகவானி பணியிடை நீக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த தற்காலிக நீக்கம் நிரந்தரம் ஆகியுள்ளது.
ஆசிரியர் பகவான் அதே பள்ளியிலேயே பணியில் தொடர கல்வித் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். ஆசிரியர் வருகை பதிவேட்டில் அவரது பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டு தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தியைச் கேட்ட மகிழ்ச்சி அடைந்த திருவள்ளூர் வெள்ளியகரம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதை ஒரு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.