பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் நடத்தும் விசாரணை தொடங்கியது.
சசிகலாவிடம் விசாரணை:
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்டு 2 வது குற்றவாளியான சசிகலா கடந்த இரு ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, ஜெயா டிவி அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் சசிகலா மற்றும் அவருடன் தொடர்புடைய அவரின் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தியா முழுவதும் 5 நாட்கள் சோதனை நடைபெற்றது. இதில் முக்கியமான சில ஆவணனங்கள் மற்றும் தகவல்கள் கிடைத்ததாக கூறப்பட்டது.
அதனடிப்படையில் சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், விவேக் உள்ளிட்டோரிடம் வருமான துறையினர் விசாரணையும் நடத்தினர். அதன் பின்பு விசாரணையின் அடுத்த கட்டமாக பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திற்கு வருமான வரித்துறையினர் கடிதம் எழுதினர்.
இதற்கு பெங்களூர் சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் பெங்களூர் புறப்பட்டு சென்றனர்.
read more... சசிகலாவின் மெளன விரதம்
சரியாக இன்று காலை 11 மணியளவில் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விசாரணையில் சசிகலா, என்னென்ன கேள்விகளுக்கு பதில் அளிக்க போகிறார்? என்ற சலசலப்பு இப்போதே துவங்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.