நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதன் முறையாக தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன்பின் அவர் தமிழக மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்திய நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறோம். தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறி, முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா முதல்வரான பின்னர் நாம் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளோம். எதிரில் வரும் தடைகளை தகர்த்து எறிந்து, தமிழக மக்களுக்கு சேவையாற்றி வருகிறோம். கல்வித் தரத்தை வைத்துதான் நாட்டின் முன்னேற்றம் கணக்கிடப்படுகிறது.
வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1,882 கோடி வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தென் மாவட்டங்களில் 19,615 ஏக்கரில் தொழில்பூங்கா அமைக்கப்படும். குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,519 ஏரிகளில் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. நீரா பானம் உற்பத்தியால் தென்னை விவசாயிகளின் வருவாய் இருமடங்காக உயரும். ரூ.350 கோடி செலவில், 75 இடங்களில் தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 2011 - 16 வரை 100 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து தமிழகம் சாதனைப் படைத்துள்ளது.
தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்படும். தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.6,500 ஆக உயர்த்தப்படும்.