Advertisment

"தமிழக மீனவர்கள் சுடப்பட்டது கடலோர காவல்படை பயன்படுத்திய குண்டுதான்" - கமாண்டர் ஒப்புதல்!

கமாண்டர் ராமாராவின் பேட்டியை அடுத்து, இந்திய கடலோர காவல்படை தான் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது என்பது ஏறக்குறைய உறுதியாகிறது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
camender

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி விசைப்படகு ஒன்றில் நான்கு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த ராணி அபாக்கா கப்பலில் இருந்த கற்படை வீரர்கள், அவர்களை நோக்கி ரப்பர் குண்டு நிரப்பிய துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டது. இதில் ஜான்சன், பிச்சை என்கிற மீனவர்கள் படுகாயமடைந்தனர்.

Advertisment

ஹிந்தியில் பேசச் சொல்லி அதிகாரிகள் கடுமையாக தாக்கியதாகவும், ஹிந்தி பேசத் தெரியாமல் மீன் பிடித்தால் சுட்டுக் கொல்வோம் என மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரம் மீனவர்களின் குற்றச்சாட்டை மறுத்த இந்திய கடலோர காவல்படை, மீனவர்களை நாங்கள் சுடவில்லை என்றும், இரட்டை மடி வலையை அந்த மீனவர்கள் பயன்படுத்தியதை திசைத் திருப்பவே, இதுபோன்றதொரு குற்றச்சாட்டை அவர்கள் சுமத்தியுள்ளனர் என்றும் மறுப்பு அறிக்கை வெளியிட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து, மீனவர்கள் மீதான கடலோர காவல்படையின் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னையில் கடந்த 18-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்தவில்லை. மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக பயன்படுத்தப்பட்ட ரப்பர் தோட்டாக்கள் இந்திய கடற்படை பயன்படுத்தும் வகை அல்ல. மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீது பாய்ந்த குண்டு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. தொடர்ந்து அதுகுறித்து விசாரித்து வருகிறோம். ஒருவேளை மீனவர்கள் கூறியது கூட உண்மையாக இருக்கலாம். ஆனால், தீவிரமாக விசாரித்த பிறகே, உண்மை விவரம் தெரியவரும்" என்றார்.

இந்தச் சூழ்நிலையில், தங்கச்சிமடத்தில் இன்று பேட்டியளித்த இந்திய கடலோர காவல்படை கமாண்டர் ராமாராவ், "இந்திய கடலோர காவல்படை தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர். சிதறிய குண்டுகளையும் அவர்கள் சேகரித்தனர். அந்த குண்டுகள் இந்திய கடலோர காவல்படையினர் பயன்படுத்தும் தோட்டாக்கள் தான். 0.22MM குண்டு கடலோர காவல்படையினரால் பயன்படுத்தப்படுகிறது.

ICGS77 ராணி அபாக்கா என்ற கடல்படை வீரர்கள் வந்த அந்த கப்பல் சென்னையைச் சேர்ந்தது. சென்னையில் இருந்து வந்ததால் நடுக்கடலில் என்ன நடந்தது என தெரியாது. கடல்படை வீரர்கள், படகை நிறுத்துமாறு எச்சரித்தும் நிறுத்தாமல் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம். இது தொடர்பாக சென்னையில் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கமாண்டர் ராமாராவ், "அது ரப்பர் குண்டு என நினைத்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்த கருத்தை தெரிவித்து இருக்கலாம்" என கூறியுள்ளார்.

இந்திய கடலோர காவல்படை கமாண்டர் ராமாராவின் இந்த பேட்டியை அடுத்து, இந்திய கடலோர காவல்படை தான் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது என்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது.

முன்னதாக, 'மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து தான் எங்களுடைய கருத்தும்' என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்த நிலையில், இந்த அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அது மத்திய அரசின் பெயரை டேமேஜ் செய்யும். குஜராத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அப்படியொரு அவப்பெயரை மத்திய அரசு விரும்பாது.

அதேசமயம், பாஜக துணையுடன் தமிழகத்தில் எடப்பாடி அரசு ஆட்சி நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், இவ்விவகாரத்தில் எந்தளவிற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கப் போகிறது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment