ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி விசைப்படகு ஒன்றில் நான்கு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த ராணி அபாக்கா கப்பலில் இருந்த கற்படை வீரர்கள், அவர்களை நோக்கி ரப்பர் குண்டு நிரப்பிய துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்டது. இதில் ஜான்சன், பிச்சை என்கிற மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
ஹிந்தியில் பேசச் சொல்லி அதிகாரிகள் கடுமையாக தாக்கியதாகவும், ஹிந்தி பேசத் தெரியாமல் மீன் பிடித்தால் சுட்டுக் கொல்வோம் என மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் மீனவர்களின் குற்றச்சாட்டை மறுத்த இந்திய கடலோர காவல்படை, மீனவர்களை நாங்கள் சுடவில்லை என்றும், இரட்டை மடி வலையை அந்த மீனவர்கள் பயன்படுத்தியதை திசைத் திருப்பவே, இதுபோன்றதொரு குற்றச்சாட்டை அவர்கள் சுமத்தியுள்ளனர் என்றும் மறுப்பு அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து, மீனவர்கள் மீதான கடலோர காவல்படையின் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்தவில்லை. மீனவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக பயன்படுத்தப்பட்ட ரப்பர் தோட்டாக்கள் இந்திய கடற்படை பயன்படுத்தும் வகை அல்ல. மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீது பாய்ந்த குண்டு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. தொடர்ந்து அதுகுறித்து விசாரித்து வருகிறோம். ஒருவேளை மீனவர்கள் கூறியது கூட உண்மையாக இருக்கலாம். ஆனால், தீவிரமாக விசாரித்த பிறகே, உண்மை விவரம் தெரியவரும்" என்றார்.