இந்திய வானிலை மையம், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மழைக்கான வாய்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தற்போது, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தில் 12 செ.மீ. மழை பதிவானது. அதே போல் தமிழ்நாட்டில் அதிபட்சமாக திருத்தணியில் 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது.
இதற்கிடையே வடக்கு மற்றும் தெற்கு திசையில் பரவியுள்ள மேக கூட்டங்களாலும், வடக்கு உள் கர்நாடகத்தில் இருந்து தெற்கு தமிழ்நாடு வரை மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் கோடை மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.
வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘தமிழகத்தில் பல இடங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் கோடை வெப்பத்தில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும். ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இப்போதைக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை. மழைக்கு இன்னும் காத்து இருக்க வேண்டும் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. மார்ச் 1-ந்தேதியில் இருந்து இயல்பான அளவை தாண்டி மழை பெய்துள்ளது.
இந்த கால கட்டத்தில் சராசரியாக 79.5 மி.மீ. மழை தான் கிடைக்கும். ஆனால் இந்த முறை 86 மி.மீ. மழை பெய்து கூடுதலாக 8 சதவீத மழை கிடைத்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதிக்கு முன்பே தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக புனே வானிலை மையம் ஆய்வு செய்து தெரிவித்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.’ இவ்வாறு அவர் கூறினார்.