கடந்த சில நாள்களுக்கு முன்பு தங்கள் தொகுதியில் இருக்கிற முக்கியமான பத்து பிரச்சினைகளைப் பட்டியலிட்டு அவற்றை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அந்த உத்தரவை ஏற்று முதல் ஆளாக தனது திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள முக்கியமான தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளை பட்டியலிட்டு ஆட்சியரிடம் அளித்திருக்கிறார் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்.
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமாரிடம் அவர் கொடுத்துள்ள அந்த பட்டியலில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க வரும் வயதானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிரமமின்றி தரிசிக்க ரோப் கார் வசதி, 24 மணிநேரமும் தங்குதடையற்ற குடிநீர், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகண்டு மக்கள் நடந்து செல்ல நடைபாதை, சிரமமான பகுதிகளில் சுரங்கப்பாதை, கே.சாத்தனூர் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம், உய்யக்கொண்டான் கால்வாய் சீரமைப்பு, டவுன்ஹால் சீரமைப்பு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்.
அவற்றை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும் என்று ஆட்சியரை கேட்டுக் கொண்டுள்ள அவர் தமது தொகுதியின் முன்னேற்றத்திற்கான முக்கிய தேவைகளைத் தெரிவிக்க வாய்ப்பளித்த தமிழக முதல்வருக்கு தொகுதி மக்களின் சார்பாக இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கின்றார்.
தமிழகத்திலேயே முதன் முதலாக ஒரு எம்.எல்.ஏ., தமது தொகுதி பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டிருப்பது இதுவே முதன்முறை எனலாம்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil