Advertisment

ஜெயலலிதா மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் - அரசாணை வெளியீடு!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெயலலிதா மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் - அரசாணை வெளியீடு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.

அவர் மரணம் அடைந்து 10 மாதங்கள் ஆகியும், இன்னும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன.

அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முதன் முதலாக கோரிக்கை வைத்தார். அதன்பின், 'ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்' என முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

பின்னர் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். கூட்டணி இணைந்த போது, 'ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, நாங்கள் யாரும் அவரை பார்க்கவில்லை. அவர் இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம். அதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை கண்டறிய விரைவில் விசாரணையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.

இதையடுத்து, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அரசாணையில் வேறு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதாவது, எவ்வளவு நாட்கள் இந்த கமிஷன் விசாரணை மேற்கொள்ளும்? எப்போது தனது அறிக்கையை தாக்கல் செய்யும்? என்பது போன்ற விவரங்கள் அரசாணையில் இடம்பெறவில்லை.

முன்னதாக, இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து தினகரன் பேசிய போது, "மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் போது சசிகலா எடுத்த வீடியோ எங்களிடம் உள்ளது. ஜெயலலிதா எடை குறைந்து நைட்டியுடன் இருந்ததால் அதனை வெளியிடவில்லை. தேவைப்பட்டால் நீதி விசாரணையின் போது அந்த வீடியோவை தாக்கல் செய்வோம்" என்றார்.

இந்நிலையில், தற்போது விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதால், சசிகலா எடுத்ததாக கூறும் அந்த வீடியோவை தினகரன் விசாரணைக் கமிஷன் முன்பு சமர்பிப்பாரா? ஜெயலலிதா மரணத்திற்கான உண்மையான விடை கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Apollo Hospital
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment